இறையன் அவர்களின் இயற்பெயர் கந்தசாமி என்பதாகும். மதுரையில் இராமுத்தாய் - அழகர்சாமி ஆகிய பெற்றோரின் மூத்த மகனாய் 4.6.1930 அன்று பிறந்து, திண்டுக்கல்லில் வளர்ந்து, இன்று தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் தந்தை பெரியார் நிறுவிய திராவிடர் கழகத்தின் தலைமையகத்தில் பொறுப்பாற்றிவர்.
சிறுவனாக இருந்தபோதே பெரியார்ப் புரட்சியின் பாதிப்புகளுக்குத் தன்னை யறியாமலேயே இலக்கானார். அப்பாதிப்புகள் பிற்காலத்தில் பகுத்தறிவுச் சிந்தனைகளாக வளர்ந்து இவரை அறிவாசான் அய்யாவின் பாசறைக்கு இட்டுச் செல்லுவதில் பங்காற்றியுள்ளன.
ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இவர் சேருங்காலத்திற்குள் ஒரு முதிர்ச்சியுள்ள திராவிடர் கழக இளைஞனாய் ஆகிவிட்டிருந்தார். எனவே ஆசிரிய மாணாக்கன் என்னும் அந்தத் தகுதியை எய்தியவுடனேயே இவர் ஆற்றிய முதல் வினையே திராவிடர் மாணவர் கழகம் நிறுவியமைதான்.
பயிற்சி நிறுவனத்தில் படித்துக் கொண்டிருந்த நிலையில் 1948-இல் ஈரோட்டில் நடந்த சிறப்பு மாநாட்டிற்குச் சென்றிருந்தபோது, ஏற்கனவே திண்டுகல்லில் இவரின் நடவடிக்கைகளைக் கவனித்திருந்த டார்ப்பீடோ ஏ.பி. சனார்த்தனம் அவர்களால் கி. வீரமணி,, மு. கருணாநிதி என்னும் அன்றைய இளம் முன்னோடிகளிடம் இவர் இயக்கத்திற்கு நன்கு பயன்படுவார் என அறிமுகப்படுத்தப் பெற்றார். அப்போதிருந்து இப்போதுவரையிலும் தமிழகத்தில் கழகச் சார்பில் நடைபெற்றுள்ள பெரிய மாநாடுகள் அனைத்திற்கும் சென்று கலந்திருக்கிறார்.
1949-இல் நிகழ்ந்த விரும்பத்தகா வெளியேற்றங்களின்போது, ஆசிரியர்ப் பயிற்சி மாணவராக இருந்த இவர், அய்யாவின் விளக்கங்களை ஆழமாகப் படித்துப் புரிந்துகொண்டு உணர்ச்சிக் கடிமையாகாது, அறிவின் ஆட்சிக்கு இலக்கானவராய் - அய்யாவின் கழகத்தில் ஊன்றி நின்றார்.
மேலும் திண்டுக்கல் திராவிடர் கழகத்தையே முற்றிலுமாகக் கலைத்துவிட வேண்டும் என்னும் முயற்சியில் இறங்கியோரிடம், கழகத்தைச் சார்ந்து கடைசியாக ஒரேயொருவர் இருந்தாலும் அவரிடம் பிறர் பதவி விலகல் மடல் கொடுத்துவிட்டு வெளியேறிவிடவேண்டுமே யொழிய கழகத்தையே கலைப்பதாகக் கூறுவதை ஒப்பமாட்டோம்! என்று உறுதி காட்டியதுடன், புதிய நிருவாகக் குழு ஒன்றை அரும்பாடுபட்டு அமைப்பதில் பெரும்பங்காற்றினார்.
அத்துடன் அய்யா-அம்மா ஏற்பாட்டை வரவேற்கும் முறையில் திண்டுக்கல்லுக்கு அவர்களை வரவழைத்து மாபெரும் கூட்டமொன்றை மாணவர் கழகத்தின் சார்பில் நடத்திக் காட்டினார்.
திராவிடர் மாணவர் கழகத்தில் தொண்டாற்றிக்கொண்டே YMDA எனும் திராவிட இளைஞர் விளையாட்டுக் கழகம் அமைத்து, வளைப்பந்து, உதை பந்து ஆகிய விளையாட்டுகளில் நம் இளைஞர் பயிற்சியுறச் செய்து, பல போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பெற ஏற்பாடு பண்ணியவர் இவர்.
ராஜகோபாலாச்சாரி புதிய கல்வி என்ற பெயரில் குலக் கல்வித் திட்டம் கொண்டுவந்தபோது உயர் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராக இருந்த இவர் அக்கல்வித் திட்டத்தை மறுத்து ஆசிரியர்களின் ஆய்வுக் குழுக்களில் குரல் கொடுக்கத் தயங்கவில்லை.
அதே ஆச்சாரியார் ஆட்சியின்போது அரசுப்பள்ளி ஆசிரியராக அமர்த்தப்பெற்ற இவர், அ. கந்தசாமி, ஆசிரியர், அரசர் சேதுபதி உயர்நிலைப் பள்ளி, பறமக்குடி என்னும் முகவரிக்கு விடுதலை வரவழைத்து, பார்ப்பன ஆசிரியர்கள் உட்பட ஆசிரியர் அனைவரையும் படிக்கச் செய்தார்.
பறமக்குடியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது கழகக் கிளைகளைச் செம்மைப் படுத்துவதற்காகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுவந்த வழக்கறிஞர் இரா. சண்முகநாதன், என்.ஆர். சாமி ஆகிய முகவை மாவட்டத் தலைவர்கட்குப் பெருந்துணை புரிந்தார் இவர்.
சில ஆண்டுகளிலேயே நிலையுயர்வு வழங்கப்பட்டு, பள்ளி ஆய்வாளராய்த் தேவகோட்டைக்கு அனுப்பப்பட்ட இவருக்கு ஆசிரியருலகிலும் அரசு அதிகாரிகளிடத்திலும் நற்பெயர் கிட்டியது.
பெரியார் நெறியைப் பின்பற்றிய இவர் ஆசிரியர்கட்கு உயர்ந்த மதிப்பளித்து (கல்வியதிகாரிகளை எஜமான் என்றெல்லாம் அழைக்கும் ஆசிரியர்கள் வாழ்ந்த காலமது!) அவர்களுடன் தோழராக, ஊக்குவிக்கும் வழிகாட்டியாகப் பழகிய இவரது பான்மை ஆசிரியர்களிடையே வியப்பு, தன் மதிப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றைத் தோற்றுவித்தது!
அக்காலத்தில் முதியோர் கல்வி என்னும் பெயரில் நடைபெற்ற இரவுப் பள்ளிகளைத் திடீரென்று பார்வையிடச் சென்று ஊர்மக்கள் கூடலுக்கு ஏற்பாடு பண்ணிக் கல்வியின் இன்றியமையாமையைப் பயன் கூட்டும் வண்ணம் எடுத்துரைத்த இவரின் பொறுப்புணர்ச்சி, அக்காலத்திய அய்ந்தாண்டுத் திட்டங்களைப் பரப்புவதில் இவர் காட்டிய பேரார்வம் ஆகியவற்றால் கல்வித் துறை மேலதிகாரிகள் மட்டுமின்றி மாவட்ட ஆட்சியாளர்களும் இவரைப் பாராட்டி, காமராசர் அரசுக்கு அறிக்கைகள் அனுப்பினர்.
சில சிற்றூர்ப் பள்ளிகளில் ஆதித் திராவிட பழந்தமிழ்க் குடிக் குழந்தைகள் பிரித்து அமரவைக்கப் பட்டிருந்த சூழ்நிலைகளை - தலைமையாசிரியர்களிடம் நயமாகவும் சட்டப்படி வற்புறுத்தியும் சரிசெய்ய முனைப்புக் காட்டியவர்.
அய்யா அவர்கள் 1957-இல் சிறைப்படுத்தப்பட்டுச் சென்னை-பொது மருத்துவமனையில் இருந்தபோது சென்னைக்கு வந்த இவர் அன்னை மணியம்மையாரின் ஏற்பாட்டில் அய்யாவுக்கு உணவு கொண்டுபோகும் தோழருடன் சென்று அய்யாவைக் கண்டவர்.
பறமக்குடியில் இவர் பணியாற்றிக் கொண்டிருந்த கட்டத்தில் அவ்வூரில் திராவிட முன்னேற்றக் கழக நகரச் செயலாளர்ப் பொறுப்பிலிருந்த - ஏற்கனவே இவருடன் பழக்கப்பட்ட - நண்பரின் மருமகள் இலட்சுமி (பின்னர் திருமகள் ஆகிவிட்டார்) அப்பள்ளியில் பயின்று கொண்டிருந்த மாணவி.
அய்ந்தாண்டுக் காலம் பொறுத்திருந்து ஒருவருக்கொருவர் நன்றாகப் புரிந்துகொண்டு எந்தச் சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள முடியும் எனும் உளத்திண்மை பூண்டு, அச்சுறுத்திய எதிர்ப்புகளையெல்லாம் திட்டமிட்டு வென்று, 10.3.1959 அன்று இருவரும் துணைவர்களாக - இணையர்களாக - திராவிடர் கழக - திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களின் ஊக்கமூட்டும் வாழ்த்துகளுடன் தந்தை பெரியாரின் முதற்கொள்கையான ஜாதியொழிப்புக்குப் பங்களிப்புச் செய்த வீரர்களாயினர்!
இவர்களின் மக்கள் பண்பொளி, இறைவி, மாட்சி ஆகிய மூன்று பெண்களுக்கும் இவரிருவரின் ஜாதிகளையும் சேராதோரைக் கணவர்களாய் ஆக்கிவைத்துக் காட்டினர். அவ்வாழ்க்கை ஒப்பந்த விழாக்கள் முறையே அன்னை மணியம்மையார் தலைமையிலும், இந்தியக் குடியரசுத் தலைவர் கியானி செயில் சிங் முன்னிலையிலும், ஆசிரியர் கி. வீரமணியவர்களின் தலைமையிலும் ஏற்பாடு செய்யப்பட்டன.
தன் துணைவியாரிடம் இவர், தங்களின் இரண்டாம் செல்விக்குத் தமிழ்க்கண்டத்தின் தலைக் குடியான ஆதித் திராவிடப் பஞ்சமக் குடியிலிருந்து ஒரு துணைவனைத் தேர்ந்தெடுக்கலாம் என்னும் தனது நெடுங்கால உள்ளக் கிடக்கையை சொல்லிக் காட்டியபோது அவருக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது, நானும் பிள்ளைகளும் முன்பே இப்படி நிறைவேற்றிக் காட்ட வேண்டுமென்று முடிவு செய்து வைத்திருக்கிறோமே! என்றார் திருமகள்.
ஒரு மாநாட்டில்
அவ்வாறே நடந்தது !
. இவர்களுடைய மகனின் வாழ்க்கையொப்பந்தம் சற்று வேறுபாடான - புதுமை வாய்ந்த நிகழ்ச்சியாய் அமைந்தது. குடியரசுத் தலைவருக்கு இயக்கம் கருப்புக்கொடி காட்டும் பேரணி நடத்தி, ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் சிறை செய்யப்பட்டிருந்தபோது, இவ்விருவரின் திட்டப்படி, இசையின்பன் - பசும்பொன் வாழ்க்கை ஒப்பந்தம் தமிழர் தலைவரால் நடத்தி வைக்கப்பட்டது. இச்சிறைத் திருமணம் பற்றி, கைது செய்யப்பட்டோர் கைப்பிடித்துக் கொண்டனர் எனச் செய்தியேடுகள் வியந்து எழுதின!
பல ஆண்டுகளாக இயக்க நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடமுடியாத சூழ்நிலையில் பிறவகை ஒத்துழைப்பு மட்டுமே காட்டி வந்த இறையன் எனும் தமிழ்ப்பெயரை எய்திக் கொண்டுவிட்ட கந்தசாமியின் வாழ்வில் கற்பனையே செய்திராத அந்த நல்வாய்ப்பு ஏற்பட்டது.
2.7.1970 அன்று சிவகங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கழகக் கூட்டத்தில் மக்களுக்கு அறிவு கொளுத்த வந்திருந்த அறிவின் எல்லை அய்யா அவர்களைக் கண்டு வணக்கம் தெரிவிக்கச் சென்ற இவரை மாவட்டக் கழக முன்னோடிகள் அம்மாபெரும் பொதுக்கூட்ட மேடையில் அய்யாவின் முன்னிலையில் பேசுமாறு செய்துவிட்டனர்.
நல்லவண்ணம் தன்மான இயக்கத் தனிச் சிறப்புகளை மக்களின் முன்பு எடுத்துவைத்து அமர்ந்த இறையனை உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் அய்யா அவர்கள் உள்ளமாரப் பாராட்டினார். என்னுடன் இப்படியே பறமக்குடிக்கு வருகிறீர்களா? என்பதாகவேறு அய்யா கேட்டுவிட்டார். அவ்வளவுதான்; இவர் தன்னையே மறந்தார்; எங்கோ பறந்தார்!
தொடர்ந்து அய்யா அவர்கள் மக்களுக்குப் பாடங்கள் கற்பித்த கூட்டங்களில் பங்குபற்றும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியது. உலகப் புகழ் வாய்ந்த சேலம் மாநாடு (1971), இயக்க வரலாற்றில் குறிப்பிடத்தக்க திருவாரூர் மாநாடு (1971) ஆகிய தனிச் சிறப்பு படைத்த மாநாடுகளில் இவர் சிற்றுரையாற்றுமாறு அய்யா செய்தார்கள். தி.மு.க. ஆட்சியில் பகுத்தறிவாளர் கழகங்கள் நிறைய முளைத்தெழுந்த நிலையில், பகுத்தறிவுக் கருத்துகள் பரப்பிய பெரும் பணியில் நல்ல அளவுக்குப் பங்குண்டு இவருக்கு.
இவரின் தொண்டின் எல்லையின் விரிவாக்கத்திற்காகவும் இவரது உரைப் பொழிவுத் திறன் கழக இளைஞர்களைப் பயிற்றுவிக்கப் பயன்பட வேண்டும் என்பதற்காகவும் கழகத் தலைமை வட ஆர்க்காட்டு வடசேரியில் நடந்த பயிற்சி முகாமிற்கு இவரை அழைத்து, பாடங்கள் எடுக்குமாறு ஏற்பாடு செய்தது. அங்கு இவர் விளைவித்த தாக்கத்தை மதிப்பிட்ட கழகத் தலைமை தொடர்ந்து இவரைப் பயிற்றுநர்ப் பணியில் ஈடுபடுத்தியது.
பகுத்தறிவாளர் கழகப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இவர் கழகத்தின் தலைமையால் புதிதாக உருவாக்கப்பெற்ற பகுத்தறிவு ஆசிரியரணி எனும் அமைப்பின் தலைவராக அமர்த்தப்பட்டார். அவ்வமைப்பின் சார்பில் பல பயன் கூட்டும் நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
ஆற்றலும் ஆர்வமும் மிக்க சென்னைப் பகுத்தறிவு ஆசிரியரணித் தோழர்களின் துணை கொண்டு 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புப் பயிலும் (பார்ப்பனரல்லாத்) தமிழ் மாணவ-மாணவியர்க்கு இலவயமாகச் சிறப்பு வகுப்புகள் இவரால் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க இனத் தொண்டாகும். பல ஆண்டுகள் இத்திட்டத்தினைப் பெரியார் திடலில் நடைமுறைப்படுத்தினார் இவர்.
1989-மே 31 அன்று அரசுப் பணியிலிருந்து ஓய்வடைந்த இவர் மறுநாட் காலையே தலைமையகத்திற்கு வந்து இயக்கத் தொண்டுக்கு முழுமையாகத் தன்னை ஒப்படைத்துவிட்டார். தலைமையின் நோக்கப்படி உடனடியாகத் தமிழ்நாட்டு அரசுப் பணித் தேர்வாணைக்குழு நடத்தும் தேர்வுகட்கு நம் இன இளைஞர்கட்குப் பயிற்சியளிக்கும் திட்டத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு வினைப்பாட்டில் இறங்கிவிட்டார்.
ஏற்கனவே நமதியக்க இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்த இவரை, விடுதலையில் ஆன்மீகம் அறிவோமா? எனும் பொருள்பற்றித் தொடர்ந்து எழுதும் பத்திப் படைப்பாளர் (ஊடிடரஅளைவ) ஆக்கினார் விடுதலை ஆசிரியர். அம்முயற்சியில் நல்ல உழைப்புக் காட்டினார் இவர். இன்னும்-கழகத்தின் பயிற்சிப் பட்டறைச் செயலாளர், உதவிப் பொதுச் செயலாளர் (கலைத்துறை), விடுதலை அயல் நாட்டுப் பதிப்பு (இணைய தளம்) பொறுப்பாளர், பெரியார் பகுத்தறிவு ஆய்வக-நூலக இயக்குநர், தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற அமைப்பாளர், பாரளாவிய பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணித் தலைவர், புதுமை இலக்கியத் தென்றல் - மேடை ஒருங்கிணைப்பாளர், பெரியார் பயிலக ஆங்கிலப் பேச்சுப் பயிற்றுநர் போன்ற பல்வேறு பொறுப்புகளை ஏற்று, குடி செய்வார்க்கு இல்லை என்று பெரியார் காட்டிய தொண்டறத்தை மேற்கொண்டு உண்மையாகவும் செம்மையாகவும் ஒழுகியவர் இவர். வெல்லுஞ் சொல் திறன் வாய்ந்த இவர் நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து பெரியாரியலை மக்களிடம் பரப்புவதில் இன்பம் கொண்டவர். சில ஊர்களில் நடந்த இயக்க நிகழ்ச்சிகளின்போது கொள்கை எதிரிகளின் தொல்லைகட்கும் உள்ளானவர்.
பட்டிமன்றங்கள் பாங்கறிந்து ஏறிச் சொல்லாடல் புரிவதில் நிறையப் பட்டறிவு இவருக்கு உண்டு என்பதால் இயக்கத்திற்கு நல்ல அளவிற்குப் பயன்பட்டார். மதப் புன்மைகளையும் பாழ்த்தும் தன்மைகளையும் மக்களிடையே வெளிப்படுத்தி நாட்டையே குலுக்கிய ஹ-பட்டிமன்றங்களை இயக்கம் ஏற்பாடு பண்ணியபோது இவர் பெரும் பங்காற்றினார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சோவியத் இதழ்கள் விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் நடந்த சோவியத் யூனியனில் நடைபெறும் மாற்றங்கள் சோஷியலிசத்தைப் பலப்படுத்துமா? பலவீனப்படுத்துமா? என்னும் பட்டிமன்றத்தில் பலவீனப்படுத்தும் என்று கழகத்தின் சார்பில் வழக்காடிய அணியின் தலைவராக இறையன் எடுத்துவைத்த வழக்கு பெரும் பரபரப்பை விளைவித்ததுடன் பொதுவுடைமைச் சிந்தனையாளர்களின் அரும் பாராட்டுகளை ஈட்டியது. அம்மேடையில் இவர் சோவியத் தூதுக் குழுவினரின் முன்னிலையிலேயே போச்சு, போச்சு என அலறிய வண்ணமே, சோவியத் ஒன்றியம் உடைந்தே போனது!
இவரது பயனுடைய உரை வீச்சின் வலிமையையும் இவரின் பெரியாரியற் பயிற்சியின் ஆழத்தையும் மதிப்பீடு செய்த கழகத் தலைமை இவருக்குப் பெரியார்ப் பேருரையாளர் விருதளிக்க வேண்டுமென்று கருதியது.
அதன்படி 1982-ஃபெப்ரவரியில் திருச்சியில் மூன்று மாலைகளில் கற்றுத் துறைபோகிய சான்றோர்களின் தலைமையில் முறையே, பெரியார் ஒரு சமுதாய வழக்குரைஞர், ஒரு நோய் முதல் நாடும் மருத்துவர், ஒரு தேர்ந்த பொறியாளர் என்னும் தலைப்புகளில் செய்திச் செறிவான உரைப் பொழிவுகள் நிகழ்த்திய இறையன் அவர்களுக்குப் பெரியார்ப் பேருரையாளர் என்னும் விருதினைத் கழகத் தலைமை 21-02-2002 அன்று அளித்துப் பெருமைப்படுத்தியது.
இவரின் மொழிபெயர்ப்பாற்றலில் நம்பிக்கை கொண்ட கழகத் தலைமை நம் இயக்க நிகழ்ச்சிகளில் இவரைப் பயன்படுத்தியது. வி.டி. ராஜசேகர், சந்திரஜித், டி.பி. யாதவ், பசவலிங்கப்பா, டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி, ராம் விலாஸ் பஸ்வான், சீதாராம் கேசரி, தேவராஜ் அர்சு, பிரகாஷ் அம்பேத்கர் முதலியோரின் ஆங்கிலப் பேச்சுகள் இவரால் மொழி பெயர்த்து மக்களின் முன் வைக்கப்பட்டன.
பசவலிங்கப்பா, டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி போன்றோர், இட்டு வாருங்கள் இறையனை என விரும்பியழைக்கும் அளவிற்கு, மக்களிடம் தாக்கம் விளைவிக்கவல்லதாக இவரது மொழி பெயர்ப்புத் தன்மை இருந்தது.
இவரின் எழுத்து நடை தனித்தன்மை வாய்ந்தது. தூய தமிழில் எண்ணற்ற கட்டுரைகள் - பெரிதும் சிறிதுமாக - எழுதியுள்ளார். பெரும்பாலும் எல்லாமே ஆய்வு முறையில் அமைந்தவை.
விடுதலை, உண்மை - சிறப்பு மலர்களில் அய்யாவின் அடிப்படைக் கோட்பாடுகள் குறித்த விளக்கக் கட்டுரைகளை விரித்தெழுதியுள்ளார்.
இவர் எழுதிய சுயமரியாதைச் சுடரொளிகள், இல்லாத இந்து மதம், ஜெயலலிதாவின் பின்னாலா திராவிடர் கழகம் சென்றது? ஆகிய நூல்கள் பிறரால் மேற்கோளாகக் காட்டப்படுபவையாக விளங்குகின்றன!
பெரியார் ஆயிரம், மகாபாரத ஆராய்ச்சி என்னும் தொகுப்பு நூல்களில் இவரின் பங்களிப்பு உண்டு. தமிழக அரசின் திறந்த வெளிப் பத்தாம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலில் அய்யா பற்றிய இவரின் கட்டுரை இடம் பெற்றது. இன்னும் இவரது நூல்கள் வெளிவரவிருக்கின்றன.
குறைந்த அளவே புழக்கத்திலுள்ள தனித்தமிழ்ச் சொற்களை இவர் தன் கட்டுரைகளில் ஆங்காங்கே பெய்து எழுதுவதால் புரிதலின் நேரம் கூடுகிறது என்னும் நடப்புண்மையை இவர் பகுத்தறிவுப் பார்வையுடன் ஏற்றுக் கொள்ளுகிறார் எனினும் நாளடைவில் நன்மையே என நம்புகிறார். பெரியாரியல் எனும் சொல்லாட்சியைப் புழக்கத்திற்குக் கொண்டு வந்ததில் இவருக்குப் பேரளவுப் பங்குண்டு!
இவர் ஒரு பாடகரும் ஆவார். பாடல்கள் இசைத்தல் மட்டுமின்றி இசைப்பாடல்கள் இயற்றுவதிலும் அவற்றிற்குப் பண்ணமைத்துப் பாடுவதிலும் பயிற்சி நிரம்பிய இவரின் ஆண்களா? பெண்களா?, தமிழினத்தின் விடிவெள்ளி, வாராது வந்த மணி எனும் பாடல்கட்கு நிறைய வரவேற்பு. தஞ்சை-தங்கம் வழங்கு விழாவில் இவர் இயற்றி இசைத்த ருஎநசளயட ஊடிஅஅரவைல என்ற பாடல் வெளிநாட்டு விருந்தினரின் பெரும் பாராட்டை ஏற்றது!
இயக்கத்தின் வளர்ச்சிக்கான களப்பணிகளில் ஈடுபாடும் கழகக் கிளர்ச்சிகளில் பங்குபற்றும் துணிச்சலும் கொண்ட இவர் எட்டுமுறை காவல் துறையினரால் தளையுண்டவர்.
இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலைக்காலத்தில் தளைசெய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலில் இறையன் பெயரும் இருப்பதாகக் கூறி, காவல் துறையினர் இவரை அழைத்துக் கேட்டபோது, பகுத்தறிவாளர் கழகத்திலிருந்து விலகிக் கொள்ளுவதாக ஒருபோதும் எழுதிக் கொடுக்க மாட்டேன் என்று வீரங்காட்டினார்.
இறையனின் இணையர் திருமகள், மகள்கள் மூவர், மருமகள் ஆகிய அய்வரும் மீட்பர் பெரியாரின் உருவக்கல் பதித்த தொங்கலொன்றை அணிந்துகொண்டுள்ளனர். வீரமணி, வெற்றிமணி, புயல், சீர்த்தி, அழல், புகழ், இனநலம், அடல் என்பவை இக்குடும்பப் பிள்ளைகளின் பெயர்கள்.