திங்கள், 9 மார்ச், 2015

எங்கள் அம்மா எங்கே?


புலவர் கோ.இமயவரம்பன்







(அம்மா அவர்களால் அன்புடன் வளர்க்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளின் துயரினைச் சித்திரிக்கும் பாடல் இது)



1. எங்கள் அம்மா எங்கே?
எவரும் சொல்ல மாட்டாரோ?
அங்கையில் உணவை அளித்து
ஆயிரம் முத்தங்கள் அளிக்கும்
(எங்கள் அம்மா)
2. அம்மா அம்மா என்றுமே
யாரை அழைப்போம் இனிமேலே
விம்மி விம்மி அழுகின்றோம்
வேதனைக் குரல் கேளீரோ!
(எங்கள் அம்மா)
3. அழகுஅருமைப் பாப்புடனே
அருட்செல்வி அமலா மற்றோரும்
அழுது கொண்டே இருக்கின்றோம்
அம்மாவைக் காட்ட மாட்டீரோ!
(எங்கள் அம்மா)
4. சின்னப் பாப்பா வைக்க மொடு
சேர்ந்து வளரும் வளர்மதியும்
சின்னக் கைகளை அசைத்தாட்டிச்
சிரித்து ஆடுதல் கண்டிடவே!
(எங்கள் அம்மா)
5. தலைசீவிச் சட்டைகள் மாட்டிடுவார்
தன் கையால் உணவு ஊட்டிடுவார்
விலைமதிப் பில்லாக் கல்விக்கே
வேனில் எங்களை அனுப்பிடுவார்
(எங்கள் அம்மா)
6. திக்கற்ற குழந்தைகள் எதிர்காலம்
செம்மையாய் அமைய வேண்டுமென்றே
தக்கதோர் ஏற்பாடு செய்துவிட்டுத்
தாயே எங்குப் போய் மறைந்தீரோ!
(எங்கள் அம்மா)
7. எங்கள் வாழ்வு வளம் பெறவே
எந்நாளும் உழைத்த எங்கள்
மங்காத ஒளிவிளக்கு எங்கே
மறைந்தது ஏனோ கூறீரோ!
(எங்கள் அம்மா)
8. அய்யா அம்மா வழியினிலே
அனைவரும் நாங்கள் தொடர்வோமே
கைகளைக் குவித்தே தொழுகின்றோம்
கண்ணீரைக் காணிக்கை யாக்குகிறோம்!
(எங்கள் அம்மா)

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்


வாழ்க்கை குறிப்புகள்
1920 மார்ச் மாதம் 10ஆம் நாள் வேலூரில் வி.எஸ்.கனகசபை - பத்மாவதி தம்பதியருக்கு மகளாய்ப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் சண்முகம், தியாகராஜன் ஆகிய இரண்டு சகோதரர்களும், கமலா என்ற ஒரு சகோதரியும் ஆவார்கள்.

வேலூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி ஆண்டு (எஸ்.எஸ்.எல்.சி.) வரை படித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் சி.டி.நாயகம் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புலவர் வகுப்பு படிக்கையில் கல்வி தடைப்பட்டு விட்டது.
1936இல் வேலூருக்கு ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பெரியாரிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அப்போது நான்காவது பாரம் படித்துக் கொண்டிருந்தபோது பெரியாரைச் சந்தித்த காரணத்திற்காக, பள்ளி நிர்வாகம் இவரை வகுப்பிலிருந்து வெளியேற்றியது.

1943 செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் - தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளால் கவரப்பட்டு அய்யாவின் தொண்டராகப் பணியாற்ற வந்தார்.
1944 சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சி திராவிடர் கழகமாக மாறிய மாநாட்டில் (27.8.1944) காந்திமதி என்ற கே.ஏ.மணி, கே.அரசியல் மணி என்று மாற்றப்பட்டு மாநாட்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு உரையாற்றினார்.

1948 டிசம்பர் 20-ஆம் நாள் குடந்தையில் நடந்த மொழி உரிமைப் போரில் அரசு தடையை மீறியதற்காக கைது செய்யப்பட்டு, பாபநாசம் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

விசாரணைக்குப் பின் இரண்டு மாதம் தண்டனை அளிக்கப்பட்டு வேலூர் சிறையில் காவலில் வைக்கப்பட்டார்.

1949 பிப்ரவரி மாதம் 23ஆம் நாள் வேலூர் சிறையிலிருந்து விடுதலை அடைந்த மணியம்மையாரை தந்தை பெரியார் வரவேற்றார்.

மார்ச் மாதம் 31ஆம் நாள் சென்னையில் மணியம்மையார் தலைமையில் இந்தி எதிர்ப்பு மறியல் போர் நடந்தது.

ஜூலை மாதம்  9ஆம் நாள் பெரியார் - மணியம்மையார் பதிவுத் திருமணம், திருமண ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது.
திருமணத்திற்குப் பிறகு கே.ஏ.மணியம்மை (கே.அரசியல் மணி) என்று இருந்து வந்த பெயரை ஈ.வெ.ரா.மணியம்மை என்று தமிழிலும், E.V.R மணியம்மை என்று ஆங்கிலத்திலும் அழைக்குமாறு தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்தார்.

1952 பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளராக தந்தை பெரியாரால் நியமிக்கப்பட்டார்.

1958 மார்ச் மாதம் 8ஆம் நாள், ஜாதி ஒழிப்புப் போரில் ஈடுபட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட தோழர் பட்டுக்கோட்டை ராமசாமியும், 10ஆம் நாள் மணல்மேடு வெள்ளைச்சாமியும் மாண்டனர். இவர்களின் சடலத்தைத் தர சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

அந்த நேரத்தில் மணியம்மையார் அவர்கள் முதலமைச்சர் காமராசர் அவர்களைச் சந்தித்து மறைந்த தோழர்களின் உடல்களைத் திரும்பப் பெற்றார். மணியம்மையார் தலைமையில் சவ ஊர்வலம் சிறப்பாக நடந்தது.
19-1-1958 விடுதலையில் வெளியான இளந்தமிழா! புறப்படு போருக்கு என்ற கட்டுரை சம்பந்தமாக அதன் ஆசிரியரும், வெளியிடுபவருமான ஈ.வெ.ரா.மணியம்மையார் மீது வழக்குத் தொடரப்பட்டது.
மணியம்மையாருக்கும், கட்டுரையை எழுதிய தோழருக்கும் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

1959 தந்தை பெரியார் அவர்களும், கழக முன்னணியினரும் சிறையில் இருந்த முக்கியக் காலகட்டத்தில் கழகம்  சோர் வடையாமலும் கழகப் பணி, நிர்வாகப் பணிகளைத் திறமையாகக் கவனித்துக் கொண்டதற்காகவும், அன்னை மணியம்மையாருக்குத் திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் (19.7.1959) பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1973 டிசம்பர் 24ஆம் நாள் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் மறைவுற்ற பின் அன்னை மணியம்மையார் அவர்கள் கழகத் தலைவர் பொறுப்பேற்றுக் கழகத்தை வழிநடத்திச் சென்றார்.

1974 திருச்சி பெரியார் மாளிகையில் 6.1.1974-இல் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு, மணியம்மையார் அவர்களை கழகத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது.

3.4.1974 அன்று அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வகை செய்ய மத்திய அரசை வலியுறுத்தி சென்னை தலைமை அஞ்சலகம் முன் மறியல் கிளர்ச்சி செய்தார்.

இப்போராட்டத்தின் 2ஆம் கட்டமாக 26.5.1974 அன்று சென்னை வந்த டில்லி அமைச்சர் ஒய்.பி.சவானுக்கு கருப்புக் கொடி காட்டினார்.

அன்னை மணியம்மையார் அவர்களின் எதிர்காலப் பாதுகாப்பைக் கருதி அன்னை மணியம்மையார் அவர்களுக்கே கூடத் தெரியாத நிலையில் தந்தை பெரியார் அவர்களால் ஏற்பாடு செய்து வைத்திருந்த சொத்துகளைத் தமக்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல் மக்களின் பொது நலனுக்கே அவை பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் உடல் நலமின்றி, தாம் சென்னைப் பொது மருத்துவமனையில் இருந்தபோது அன்னை மணியம்மையார் அவர்கள் 23.9.1974 அன்று பெரியார் -மணியம்மை கல்வி அறக்கட்டளைக் கழகம் துவக்கப்பட ஏற்பாடு செய்தார்கள். அந்த அமைப்பு 24.9.1974 அன்று சென்னையில் பதிவு செய்யப்பட்டது. அந்த அறக் கட்டளைக்கு அன்னை மணியம்மையார் அவர்கள் தலைவராக வும், கி.வீரமணி அவர்கள் செயலாளராகவும் இருந்தார்கள்.

டிசம்பர் 25ஆம் நாள் சென்னை - பெரியார் திடலில் நடந்த இராவண லீலா நிகழ்ச்சி சம்பந்தமாகக் கைது செய்யப் பட்டார். இது சம்பந்தமாக வழக்குத் தொடரப்பட்டது.

பெரியார் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மய்யத்தை நிறுவினார். பெரியார்- மணியம்மை பெண்கள் உயர்நிலைப் பள்ளியை திருச்சியில் ஏற்படுத்தினார்.
1975 ஏப்ரல் 26-இல் வைக்கக்கத்தில் நடைபெற்ற வைக்கம் பொன்விழாவில் கலந்துகொண்டு பெண்கள் மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.
சென்னை அண்ணாசாலையில் 21.9.1975 அன்று கலைஞர் சிலையை அமைத்து திறப்பதற்கு ஏற்பாடு செய்தார்.

1976 செப்டம்பர் 9ஆம் நாள் இராவண லீலா வழக்கில் மணியம்மையார் மற்றும் தோழர்களுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. வழக்கை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது.

மிசா காலத்தில் 16.9.1976 அன்று தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு முதல் நாள் திடீரென்று கைது செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து விடுதலை செய்யப்பட்டார்.

1977 ஏப்ரல் 25ஆம் நாள் இராவண லீலா வழக்கில் மணியம்மையாரும், மற்ற தோழர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

அக்டோபர் மாதம் 30-ஆம் நாள் தமிழகம் வந்த முன்னாள் பிரதமர்  இந்திரா காந்திக்கு, தமது உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்த நிலையிலும் கருப்புக் கொடி காட்டியதற்காகக் கைது செய்யப்பட்டார்.

பெரியார் திடல் முகப்பில் பெரியார் பில்டிங்ஸ் என்ற ஒரு பெரிய கட்டடத்தை உருவாக்கினார்.

1978 மார்ச் மாதம் 16ஆம் நாள் மாரடைப்பு நோயால் சென்னை பொதுமருத்துவமனையில் காலமானார்.